சங்கட ஹர சதுர்த்தி :
ஆக்கம் மற்றும் தொகுப்பு
- அன்புடன் R.P.OM 8056156496
ஓம் கம் கணேசாய நமஹா !
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம்
துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும்
தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட
துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது.
பொதுவாக, நாலாம் பிறை எனப்படும் சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்க்கலாகாது. அவ்வாறு பார்க்க நேர்ந்தால், கீழ்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:" "சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம்.
சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.
சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கப் பெறும் பலன்கள் :
கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.
சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
**********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி கதைகள் -1
**********************************************************************************
சந்திர பகவான் சாபம் பெற்ற கதை :
*************************************
விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, "பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
*********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி கதைகள் - 2
***********************************************************************************
கிருஷ்ணர் சங்கடன் நீங்க பெற்ற கதை .
******************************************
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அதன் பலனாக, சத்ராஜித் எனும் யதுகுலத்தைச் சேர்ந்த குறுநில மன்னனிடம் இருந்த 'சியமந்தக மணி' என்னும் தினந்தோறும் எட்டுப் பாரம் பொன் சுரக்கும் வல்லமை பெற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அபகரித்துக் கொண்டதாக அவருக்குப் பெரும் பழி ஏற்பட்டது. உண்மையில் அந்த ரத்தினத்தை, சத்ராஜித், பிரசேனன் என்னும் பெயருடைய தன் தம்பியிடம் கொடுத்து வைத்திருந்தான். ஒரு நாள் பிரசேனன், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் போது, ஒரு சிங்கம் அவனை கொன்று விட்டு அவனிடம் இருந்த மணியைக் கவர்ந்து கொண்டது. அந்த சிங்கத்தைக் கரடி அரசனான ஜாம்பவான், போரிட்டு வென்று சியமந்தக மணியைத் தனதாக்கிக் கொண்டார். இந்த ஜாம்பவான், ஸ்ரீ ராம அவதாரத்தின் போது, சீதாபிராட்டியைக் கண்டடைய உதவி செய்தவர். ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு அவரது பலம் பற்றி நினைவூட்டியவர் இவரே. இவருக்கு, ஸ்ரீ ராமபிரானை ஆலிங்கனம் செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் தன் உடல் முழுதும் அடர்ந்திருக்கும் ரோமம் அவரைக் புண்ணாக்கக் கூடுமென்று அஞ்சி தன் ஆவலை வெளியிடவில்லை. தன் தம்பியை, சியமந்தக மணிக்காக ஸ்ரீ கிருஷ்ணரே கொன்றிருக்கக் கூடுமென்ற அபவாதத்தை சத்ராஜித் பரப்பினார். ஸ்ரீ நாரத மஹரிஷி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து, சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு இது என்பதை விளக்கி, விநாயகரை வழிபட, இந்த அபவாதம் நீங்கும் என்று எடுத்துரைத்தார். அதன் படி ஸ்ரீ கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டார். பின் அந்த அபவாதத்தை நீக்குவதற்காக, இந்த சியமந்தக மணியைத் தேடி, ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிற்கு வந்தார். பிரசேனன் ,சிங்கம் ஆகியோர் இறந்து கிடப்பதை பார்த்துப் பின், கரடியின் காலடித் தடத்தை பின்பற்றி, கானகத்துள் சென்ற போது, ஒரு குகைக்குள் மட்டும் பெரும் ஒளி தென்பட, உள்ளே சென்றார். அது, ஜாம்பவானின் குகை. அவர் மகள் ஜாம்பவதி, தன் தம்பியின் தொட்டிலின் மேல் சியமந்தக மணியைக் கட்டித் தொங்கவிட்டு, தொட்டிலை ஆட்டியபடி மேற்கூறிய ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். "சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள். இதற்குள் ஜாம்பவான், ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து விட்டதால் அவருடன் போருக்குச் சென்றார். இருபத்தேழு நாட்கள் போர் நடந்தது. மல்யுத்தத்தில் வல்ல ஜாம்பவான் ஒவ்வொரு முறையும் ஸ்ரீ கிருஷ்ணரை யுத்தத்துக்காகத் தழுவிய போது இனம் புரியாத மனமகிழ்வை அடைந்தார். அவரை அறியாமல், அவர் ராம நாமத்தை உச்சரிக்க, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் உருவில் காட்சி தந்தார். தன் பக்தனின் ஆவலை இவ்வாறு இருபத்தேழு முறை ஆலிங்கனம் செய்து பூர்த்தி செய்தார் பகவான். பின், ஜாம்பவான் ஜாம்பவதியை, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்து, சியமந்தக மணியையும் அளித்தார். இந்த மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்துத் தன் அபவாதம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. சத்ராஜித் தன் மகளான சத்யபாமாவை தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்தான். இந்தப் புராணத்தைப் படிப்பவர்கள் யாவரும் அவர்களுக்கு நேர்ந்த வீண் பழி நீங்கப் பெறுவர்.
**********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி கதைகள் -3
**********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி பலனை தானம் பெற்ற இந்திரன் கதை :
*************************************************************
சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.
ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.
“ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக